புதன், 7 அக்டோபர், 2015

thiraavidam 1

திராவிடக் கட்சிகள் தீண்டதகாதோருக்கு செய்தது என்ன? - 1
திராவிடக் கட்சிகளை விமர்சிக்கிறேன் பேர்வழி என பெரியார் மீது சேற்றை வாறி தெளிப்பதல்ல என் நோக்கம் என்பதை பதிவின் முதல்வரியிலேயே தெரிவித்துவிடுகிறேன். பெரியாரை புறக்கணித்து தலித்தியம் பேச முடியாது என்பது மட்டுமல்ல பெரியாரை புறக்கணித்து அரசியல் பேசுகிற எவரும் சுய சாதி பற்றாளராக மிளிரளாமேயொழிய ஒருபோதும் தன்னை தலித்தியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும் முடியாது. பெரியாரின் மீது சேற்றைவாறி இறைப்பதென்பது என் மீதே சேற்றை அள்ளி தெளித்துக்கொள்வதொழிய வேறொன்றுமில்லை.
அதே வேளையில் பெரியார் முன்வைத்த திராவிடக் கோட்பாடு தலித்துக்களுக்கான முழுமையான விடுதலையை பெற்றுதரக்கூடியதாக அமைந்திருக்கவில்லை என்பதே என் விமர்சனம். அதை பெரியாரின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்தே தெளிவாக எடுத்தியம்பிட இயலும்.
அடுத்தபடியாக பெரியாரின், அண்ணாவின் வழிவந்தவர்கள் என்பதாக தங்களை பிரகடனப்படுத்திக்கொள்ளும் திராவிடக்கட்சிகள் ஒரு இடைநிலைச்சாதிக்கேயுரிய சாதி மேட்டின்மையோடு பார்ப்பனர்களிடம் பவ்யத்தையும் தனக்கு கீழ்பட்ட சாதி மக்களிடம் அலட்சிய மனப்போக்கையும் ஆதிக்க மனப்பாங்கையும் வெளிக்காட்டியதோடு மட்டுமல்லாமல் தங்கள் கட்சிகளின் ஆட்சிகாலத்தில் தலித் மக்களுக்கு இழைத்த துரோகங்கள் யாவும் வெட்டவெளிச்சமானவை.
ஆனால் இவைகளுக்கு மாற்றாக தனது சுயசாதி பெருமை பேசி, நாங்கள்தான் உண்மையிலேயே பிராமணர்களாக்கும் என்று பார்ப்பனியத்தை தலித்மக்களிலேயே சிலர் உயர்த்திபிடிப்பது சாதியின் நீடித்த தன்மைக்கு மேலும் உரமூட்டுகிற செயலேயன்றி வேறொன்றுமில்லை. பிராமணர்களாயினும் சரி, பள்ளர் பறையர்களானாலும் சரி, யார் பார்ப்பனிய நிலைப்பாட்டை எடுத்தாலும் அது தவறு தான், மக்களை தவறாக வழிநடத்துகிற வரலாற்று பிழைதான்.
திராவிடம், திராவிடக் கோட்பாடுகள், திராவிடத்தின் குறைபாடுகள், திராவிடக்கட்சிகளின் கோட்பாடுகள், திராவிடக்கட்சிகள் தலித் மக்களுக்கு இழைத்த துரோகங்கள், தலித் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் செயல்பாடுகள் , சுயசாதிப்பற்றும் தலித் மக்களும், பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இணையும் புள்ளியில் நம் மக்களை ஒன்றிணைப்பது எப்படி? - இவை தான் இந்த பதிவின் நோக்கமும் முடிவும்.
என் புரிதலின் பாதையில் உங்கள் கருத்துகளை மனதார வரவேற்கிறேன்.
தொடரும்...
- LEO JOSEPH D
dleokommedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக