வியாழன், 8 அக்டோபர், 2015

tamil name

தமிழ் பெயர் அரசியல்
தமிழ்நாட்டிலிருக்கிறீர்கள், தமிழ் பெயர் வைக்கலாகாதா என்ற கேள்வியை நண்பர் ஒருவர் எழுப்பினார். மேலோட்டமாக பார்க்கின் இது தமிழ் உணர்வை, தமிழ் மீதான காதலை வலியுறுத்துவதுபோல தெரிந்தாலும் இதன்பின்புலம் யாரை குறிவைக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
கணபதி, ஸ்கந்தன், நாரயணன், ஹரிஹரன், வெங்கடேஷ்வரன் என வடமொழி சொற்கள் வழங்கும் பெயர்களை பரவலாக இந்துக்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பார்ப்பன, முன்னேறிய மற்றும் இடைநிலை சாதி இந்துக்கள் வழங்கிவருகிறார்கள். இப்படியான சமஸ்கிருதம் கலந்த தமிழை இவர்கள் கண்டிக்க மற(று)ப்பதோடு மட்டுமன்றி அப்படியான சமஸ்கிருத கலப்புநடையில் எழுதப்படுகிற பத்திகளை மணிபிரவாள நடை என்று கொண்டாடவும் செய்கிறார்கள்.
எப்படி பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்பதற்கே மநு விதி வகுத்திருந்தார். அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய அந்த விதிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.
" II.31. பிராமணனுடைய பெயரின்
முதல் பகுதி ஏதேனும் மங்களமான
ஒன்றைக் குறிப்பதாக இருக்கட்டும்;
சத்திரியனுடையது சக்தியைக்
குறிப்பதாகவும், வைசியனுடையது
செல்வத்தைக் குறிப்பதாகவும் இருக்க
வேண்டும்; ஆனால்
சூத்திரனுடையது இழிப்புக்குரிய
எதையேனும் குறிப்பதாக
இருக்கவேண்டும்.
II.32. பிராமணனுடைய பெயரின்
இரண்டாம் பகுதி மகிழ்ச்சியைக்
குறிக்கும் சொல்லாகவும்,
சத்திரியனுடையது பாதுகாத்தலைக்
குறிக்கும் சொல்லாகவும்,
சூத்திரனுடையது சேவையைக்
குறிக்கும் சொல்லாகவும் இருக்க
வேண்டும்."
ஒருவனது பெயரைக் கொண்டே அவனது சாதியை அடையாளம் காண முடிகிற ஏற்பாடு இது. அண்ணல் அம்பேத்கர் மேலும் தன் கட்டுரைகளில் குறிப்பிடுவது போல , நீங்கள் யார் என்ற ஒரு இந்துவின் கேள்விக்கு உங்கள் சாதி என்ன என்பதுதான் பொருள். அதற்கான பதிலை பெறும்வரை அவர்களின் அந்த கேள்வி முழுமையடைவதில்லை.
இந்த மநு வகுத்த இந்து சட்டத்தின் படிதான் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர்கள் அமாவசை, பாவாடை சாமி, பக்கிரி, மண்ணாங்கட்டி போன்ற இழிவை குறிக்க கூடியனவாக இருந்தன. இந்த சாதி இழிவிலிருந்து தப்பித்து வெளிவரும் முயற்சியாகத்தான் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறினார்கள்.
சாதியை அடையாளப்படுத்தும் பெயர்களைவிட தங்கள் மதத்தை அடையாளப்படுத்துகிற பெயர்களை சூட்டிக்கொள்ள விழைந்ததன் பின்னனி பெயர்களின் பின்னிருந்த மநுவின் இந்து சட்ட விதிதான். இயேசுவை கும்பிடுகிற ஒருவர் அந்த மதத்தைச் சார்ந்த பெரியோர்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதிலும் அல்லாவை கும்பிடுகிற ஒருவர் அந்த மதத்தைச்சார்ந்த பெரியோர்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதிலும் என்ன பிழையிருக்கிறதென நீங்கள் சொல்கிறீர்கள்?
இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ தமிழுக்கு எதிரிகள் அல்ல, தமிழை நீச மொழி என்று பழித்தவர்களும் அல்ல. ஆனால் தமிழை நீசமொழி என்று பழித்த பார்ப்பனர்களிடம், சமஸ்கிருத கலப்பிலேயே தங்களுக்கு பெயர் சூட்டிக்கொள்கிற பார்ப்பனர்களிடம் இவர்களின் தமிழுணர்வு குழைந்து நிற்கிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் தமிழ் பற்று மேல் மட்டும் ராமன் சீதையை சந்தேகப்பட்டது போலவே நடந்துகொள்கிறார்கள்.
அவர்களின் தமிழ் மேலான பற்றை சீமான் ஒருமுறை பேட்டியில் கூறியது போல, பாத்திமா என்பது அந்நிய பெயர், அதனோடு தமிழ் என்பதை சேர்த்து தமிழ் பாத்திமா என்று சொன்னால் தமிழர் அடையாளம் வெளிப்படும் என்ற முட்டாள்தனத்தை ஒத்தது.
பெயர் எந்தளவிற்கு ஒருவருக்கு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். ஜாதி என்பதை சாதி என தமிழ்படுத்துவதோடு உங்கள் தமிழ்பற்று முடிந்துவிடுகிறது. ஆனால் வேலு என்ற அழகிய தமிழ் பெயர் வேலுப்பிள்ளை ஆனது எப்படி என்று எந்த தமிழ் உணர்வாளரும் கேள்வியெழுப்புவதில்லை. ஏனென்றால் தமிழ் உணர்வும் சாதி உணர்வும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது.
திராவிட இயக்கங்கள் இப்படியான சாதியொட்டு பெயர்களை அகற்றுவதில் தான் முனைப்பு காட்டின. சாதி பெயர்கள் இழிவை தரக்கூடியன என்ற பிரச்சாரம் வலுவாய் பரப்பப்பட்டது. சாதி அடையாளத்தைவிட மத அடையாளம் எவ்வளவோ மேல்.
முகமது இப்ராஹிம், லியோ ஜோசப் போன்ற பெயர்கள் இவர்களுக்கு அந்நியமாய் பட நிச்சயம் அவை வேற்றுமொழி பெயர்கள் என்பது மட்டுமே காரணமல்ல. அதற்குள் அவர்களின் சாதி மத வெறியும் ஒளிந்திருக்கிறது. அதன்வழி கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற அடையாளம்தான் இவர்களை அந்நியர்களாக காட்டுகிறது. இதுதான் தமிழ் பற்று. தமிழ் வளர்க்க வேறு நல்ல வழி இருந்தால் யோசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக