திங்கள், 15 டிசம்பர், 2014

ஈழமும் தமிழ் தேசிய அரசியலும் ஒரு பார்வை



  ஈழமும் தமிழ் தேசிய அரசியலும் ஒரு பார்வை


பிரபாகரன் என்ற வார்த்தையிலிருந்தே இந்த பதிவை தொடங்குகிறேன். பிரபாகரன் ஈழத்தில் உள்ள தமிழர்களின் விடுதலைக்காக போராடிய ஒரு மாபெரும் தலைவர். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே அவர்தான் தலைவர் என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம், அப்பட்டமான பொய். ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே முதலில் அவர் தலைவராக இல்லை என்பதே உண்மை. ஈழ தமிழர்களில் ஒரு பிரிவினர், அது பெரும்பான்மை பிரிவாகவும் இருக்கலாம், அவரை தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். இலங்கை என்ற சிறு நாட்டிலேயே கொழும்பு தமிழர்கள், யாழ்ப்பாண தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட பல பிரிவு இருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் பிரதிபலிப்பவராக பிரபாகரன் இருக்கவில்லை. சரி, அப்படியே அவர் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்குமே தலைவராக இருந்திருந்தாலும் அவரை எந்த நிலையிலும் உலகிலுள்ள ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவராக அடையாளப்படுத்த முடியாது. காரணம் பிரபாகரனே தனக்கான அப்படி ஒரு தளத்தை அமைத்துக் கொள்ளவில்லை.
இங்கு எழுதப்படாத சட்டமாக , பொதுவிதியாக ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதாவது தமிழ் உணர்வாளனாக என்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் நான் நிச்சயம் பிரபாகரனை ஆதரிப்பவனாகத்தான் இருக்க வேண்டும், பிரபாகரன் வழுவா நிலை கொண்ட மகான் என்பதை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு பகிரங்கப்படுத்த வேண்டும். இப்படி தமிழ், தமிழர் நலன் என்று பேசுபவர்கள் தங்களின் பரந்த வட்டத்தை ஈழத்தை மட்டுமே சுற்றி அமைக்கிறார்கள். உலகின் வேறு எந்த பகுதியில் தமிழர்கள் துன்புற்ற போதும் இவர்கள் இரத்தம் கொதிப்பதில்லை, நரம்புகள் புடைப்பதில்லை. ஆனால் ஈழம் என்றதும் பாம்பாட்டியாக இவர்கள் நெளிய ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக மற்றவர்களும் ஆட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தப்பி யாரேனும் பிரபாகரனை விமர்சித்தால் அவர்களுக்கு அடுத்த நொடியே தமிழ் துரோகி பட்டம் கட்டப்படும். உண்மையில் இங்கு ஈழம் ஈழம் என்று கூவி ரத்தக் கவிச்சை அரசியல் செய்பவர்களை விடவும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் வேறு துரோகிகள் இருக்க முடியாது. பிரபாகரனை எல்லோருக்குமான தலைவராக ஏற்பதற்கான எந்த கூறுகளும் அவரிடமில்லை என்பதையும் தாண்டி ஈழம் இங்கு பிரதான அரசியலாக்கப்படுவதன் பின்னனியில் உள்ள காரணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது தலையாயக் கடமை..
ஈழம் இங்கே பரபரப்பான அரசியலாக்கப்படுவதன் பின்னனி என்ன? அறிவார்ந்த அரசியல், உணர்ச்சிகர அரசியல் என்ற இரு பகுதிகள் உண்டு. பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன்னெடுப்பது இந்த உணர்ச்சிகர அரசியலைத் தான்.
அறிவார்ந்த அரசியல் என்பது ஒருவனிடம் கேள்விகளை மட்டுமே எழுப்பி அவனையே அதற்கு விடை தேட வைப்பது, அவனாக சிந்தித்து எது சரி, எது தவறு என தெளிவதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பது.
உணர்ச்சிகர அரசியல் மூளையை மழுங்கடித்து உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தனக்கான ஆதாயத்தை தேடிக் கொள்வது. சிந்திப்பதற்கோ தானாக முடிவெடுப்பதற்கோ கேட்பவனுக்கு எந்த வாய்ப்பும் உரிமையும் அளிக்கப்படுவதில்லை.
தனக்கு கோஷமிடவும் கொடி கட்டவும் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகளாய் எப்போதும் தன் கட்டுக்குள் அடங்கி இருக்கவும் உணர்ச்சிகர அரசியலே சாதகமானதாக இருப்பதால் ஓட்டு பொறுக்கி கட்சிகள் அனைத்துமே இந்த உணர்ச்சிகர அரசியலையே முன்னெடுக்கின்றன.
அய்யகோ ஈழத்தைப் பாரீர் என்று அழுகையோடு பேசினாலோ, அந்த ராஜபக்சேவை தூக்கிலிடு என்று நரம்பு புடைக்க கண்கள் சிவக்க சவால் விட்டாலோ உணர்வால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக எளிதில் அதில் வசியமாகிவிடுகிறோம். கருணை, கோபம், வெறுப்பு, ஆவேசம் போன்ற உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் பலாபலன்களை தியாகி என்கிற சர்வநாமத்தில் அனுபவித்துக் கொள்ளலாம்.

அறிவார்ந்த அரசியலை விட ஏன் உணர்ச்சிகர அரசியல் அதிக ஈர்ப்புக்குள்ளாகிறது? ஒரு கமர்ஷியல் படமும் கருத்துள்ள படமூம் ரசிகர்களிடம் பெறுகிற வரவேற்பை போலதான் இந்த அரசியல் கூறுகளும்.
அறிவார்ந்த அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வை நமது சுய புத்தியுடன் ஆய்ந்து தெளிகிற பொறுப்பை அளிப்பதால் அது சமூக விமர்சனத்தோடு சுய விமர்சனத்திற்கும் இட்டுச் செல்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நம்மையும் பொறுப்பாளியாக்குகிறது.
ஆனால் உணர்ச்சிகர அரசியல் அப்படி அல்ல. அது எல்லா செயல்களுக்கும் மற்றவர்களை கை காட்டி உசுப்பேற்றிவிடுவதோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. நமக்கு வசதியானதும் இதுதானல்லவா? இதுவே அரசியல்வாதிகளுக்கும் பெரும் வசதியாக இருக்கிறது.
அதனால்தான் அங்கே பாருங்கள், ஒரு இனத்தையே கருவறுத்துவிட்டார்கள் என்று உருக்கமாக பேசினாலோ ஆவேசமாக முஷ்டி உயர்த்தினாலோ நாம் மிக எளிதில் ஈர்க்கப்படுகிறோம். அந்த இன ஒழிப்பில் நமக்கு பங்கில்லை. நாம் நீதி நியாயம் பேசக் கூடிய பார்வையாளர் இடத்திலேயே எப்போதுமிருக்கிறோம்.
இங்கு தமிழகத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள், அதில் சாதிப் பேயினால் ஆயிர கணக்கானவர்ள் கடித்து குதறப்படுகிறார்களே? இது பற்றி ஏன் பெரும்பாலான அரசியல்வாதிகள் பேசுவதில்லை? ஏனென்றால் உணர்ச்சிகர அரசியலின் மூலம் சாதியை வளர்க்கலாமேயொழிய அழிக்க முடியாது. சாதி ஒழிப்பு அறிவார்ந்த அரசியலின் ஒரு பகுதி. இந்த சாதி கொடுமையில் நாமும் பங்கேற்பாளர்கள், அதாவது குற்றவாளிகள். அப்படி இருக்க அதன் மூலம் ஓட்டு வங்கியை உருவாக்குவதென்பது இயலாத விஷயம். சாதி ஒழிப்பு என்று உங்களை குற்றவாளியாக உணரச் செய்வதை விட , தமிழ் , தமிழர் நலன் என்று பேசி உங்கள் உணர்வுகளை உசுப்பிவிட்டு ஓட்டுகளை வேட்டையாடுவதென்பது அரசியல் வாதிகளுக்கு மிக எளிதானதாக இருக்கிறது. அதனாலேயே இங்கும் ஈழ அரசியல் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது..


தமிழ் தேசியம் என்றால் என்னவென்று என்னைப் போன்ற தமிழ் துரோகிகளை விட்டுவிட்டு ஏதேனும் தமிழுக்காகவே உயிரையும் அர்ப்பணித்த உங்கள் சக நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். தமிழராக ஒன்றுபடுவதுதான் தமிழ் தேசியம் என்பார்கள். சரி, திராவிடம் என்றால் ஏதோ கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என்றெல்லாம் பிதற்றி திரிகிறார்களே, தமிழ் தேசியத்தின் பேசுபொருள்கள் தான் என்ன என்று அடுத்த கேள்வி கேளுங்கள்.
தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டை தமிழர்களே ஆட்சி செய்தல், தமிழ் தேசியம் அமைத்தல் இப்படியான தேன் மொழுகிய பதில் கிடைக்கும். இந்த தேனுண்ட மயக்கத்திலியே நீங்கள் இருந்துவிட்டால் அடுத்தும் ஒரு கேள்வி இருக்கிறதே, அதை யார் கேட்பது? அதனால் கொஞ்சம் நிதானமாக இந்த கேள்வியையும் கேட்டுவிடுங்கள்.
தமிழர்களாக ஒன்றுபடுவது சரி, தமிழர்களை எப்படி ஒன்றுபடுத்துவீர்கள்? இங்கிருக்கிற தமிழர்கள் எல்லாம் சாதி ரீதியாக அல்லவா பிரிந்து கிடக்கிறார்கள்? இந்த சாதி பிணக்குகளை களைவதற்கு தமிழ் தேசியம் எதை முன் வைக்கிறது?
இந்த கேள்வியே நீங்கள் துரோகி பெரியாரின் கையாள் என்பதை அந்த தேசிய போராளிக்கு உணர்த்திவிடும். சரி அந்த பதிலும்தான் என்னவென்று பார்த்துவிடுவோமே..
தமிழர்களாக ஒன்றுபடுவோம் என்பதே தமிழ் தேசியத்தின் அடிப்படை. சாதி மறந்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். நாம் கட்டியமைக்கப்போகிற தமிழ் தேசியத்தில் சாதிகளே இருக்காது. தலைவர் பிரபாகரன் வழியில் தமிழ் தேசியம் அமைப்போம். நம்மை ஆண்டாண்டு காலமாக வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். தமிழனை தமிழனே ஆள்வது எப்போது? அதற்காகத்தான் தமிழ் தேசியம் அமைப்போம், வாருங்கள்.
அட சரியாகத்தானே சொல்கிறார்கள் என்று திருப்தியடைந்துவிட்டீர்களா? என்னிடம் இன்னும் கொஞ்சம் கேள்விகள் இருக்கிறது.

தமிழர்களின் அனைத்து துன்பத்திற்கும் தமிழர்களை தமிழர்களே ஆட்சி செய்யாதது தான் காரணமா? மண்ணின் மைந்தர்கள் ஆட்சி வந்துவிட்டால் தமிழர்கள் வாழ்க்கை நிலை உண்மையிலேயே உயருமா?
சமஸ்கிருதமே தெய்வீக மொழி, தமிழ் நீச மொழி, அதை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று போர்க்கொடி உயர்த்துகிற பார்ப்பனர்களும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதன் பின்னனி என்ன? பார்ப்பனர்கள் உண்மையிலேயே தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களா? தமிழ் தேசியம் அமைப்பதால் பார்ப்பனர்களுக்கு என்ன நன்மை?
சரி, கேள்விகளை மேலும் தொடர்வதற்கு முன் இவைகளுக்கு முதலில் விடை தேடலாம். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படுவதற்கு முன் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மண்ணின் மைந்தர்களால்தான் ஆளப்பட்டு வந்தன. சேர, சோழ, பாண்டியர்கள் எனும் தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் பெரும்பாலான நிலப்பரப்புகள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. ஆனால் அன்றைய தமிழ் மக்களின் நிலை தேனும் பாலும் தெவிட்டா அமுதும் நிறைந்தோடியதாக ஒன்றுமில்லை.
தமிழ் மன்னர்கள் எல்லோரும் பார்ப்பன அடிவருடிகளாக, அடிமைகளாகத்தான் இருந்தார்கள். பார்ப்பனர்களின் நலன் காக்கிற ஆட்சியாகத்தான் மன்னராட்சி முறை இருந்து வந்தது. இன்று மனுநீதி காத்த சோழன் என்று கொண்டாடப்பட்டு பிஞ்சுப் பருவத்திலேயே பள்ளி புத்தகங்கள் வழியாக மாணவர்களின் மனதில் பதிய வைக்கப்படுகிற அரசனின் உண்மை முகம் என்ன தெரியுமா? அது என்ன மனு நீதி? சாதிக்கொரு நீதி செய்து மநு இயற்றிய மனு தர்ம நூலின் வழி ஆட்சி செய்தவன் என்பது பொருள்.
தீண்டதகாதவர்கள் வேத மந்திரத்தை கேட்டாலும் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்ப்பனர்களுக்கு எந்த காரணத்தை முன்னிட்டும் மரண தண்டனை கூடாது, பார்ப்பனர்களை வைதாலோ அந்த குறிப்பிட்ட அங்கத்தையே வெட்டி எறிய வேண்டும் என இன்னும் இன்னும் மனம் பதைபதைக்க செய்யும் அத்தியாயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
அவன் எவ்வாறு மநுவின் வழி ஆட்சி செய்தான் என்பதற்கு நம் எல்லோருக்கும் தெரிந்த கதையான பசு ஆராய்ச்சி மணி அடித்து நீதி பெற்றதாக புனையப்பட்ட நிகழ்வு ஒன்றே போதுமானது. அந்த நிகழ்வு குறிப்பிடுவது ஒன்றைத்தான், அது அரசனுடைய மகனேயாயினும் பசுவின் உயிர் மேலானது, பசுவை எந்த காரணத்தை முன்னிட்டும் எவர் கொல்வதையும் அனுமதிக்க முடியாது. ஒரு பசு கன்று இறப்பிற்காக பார்ப்பனர்களின் வற்புறுத்தல் காரணமாக தன் சொந்த மகனையே தேரினடியில் வைத்து கொன்றவன் தான் மனுநீதி காத்த சோழன். பசுவின் உயிரும் மனித உயிரும் ஒன்று, இல்லையில்லை பசுவின் உயிர் மனித உயிரினும் மேம்பட்டது என்பதுதான் மனு நீதி.
இதே போன்ற பார்ப்பன அடிவருடி சேவைக்காகத்தான் தஞ்சை பெரிய கோயிலை கட்டியெழுப்பிய ராஜராஜ சோழனும் நினைவு கூர்ந்து போற்றப்படுகிறான். அது என்ன?

ராஜராஜ சோழன் கொண்டாடப்படுவது உண்மையில் தஞ்சை பெரிய கோயிலுக்காக மட்டுமா? அவனது பார்ப்பன அடிவருடி சேவைக்காக தான். பிரம்மதேயங்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பார்ப்பனர்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. சபா, சமிதி என்ற பெயரில் முழுதுமாக அதிகாரப் பொறுப்பில் பார்ப்பனர்களே நிரப்பப்பட்டனர். குடவோலை மூலம் மக்களாட்சியை நிலை நாட்டியவன் ராஜராஜ சோழன் என்று பெருமை எழுதப்படுகிறது. ஆனால் வாக்களிக்கும் உரிமை நிலச்சுவான்தார்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் மட்டுமே இருந்ததென்பதை வசதியாக மறைத்துவிடுகிறார்கள்.
தமிழ் மண்ணின் மைந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசர்களின் ஆட்சியிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமே ஓங்கியிருந்தது. இப்போது மீண்டும் தமிழ் தேசியம் அமைப்போம், தமிழர்களை தமிழர்களேதான் ஆள வேண்டும் என்ற முழக்கம்..
உண்மையில் தமிழ் தேசியவாதிகளின் நோக்கம் தமிழ் மண்ணை தமிழர்களே ஆள்வது மட்டும் தானா? அப்படியெனில் திராவிடக் கொள்கையாளர்கள் யார்? பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தான் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், திராவிடக் கொள்கையை பின்பற்றும் எல்லோருமேவா தமிழ் துரோகிகள்?
பார்ப்பனர்கள் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதன் நுண்ணரசியல் அது தமிழ், தமிழர் போர்வையில் தங்களை சுலபமாக உள்வாங்கிக்கொள்வதால் தான். அதுமட்டுமல்ல தமிழ் தேசியம் கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற எந்தவொரு பார்ப்பனீய விரோத செயல்பாட்டோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது கிடையாது.
திராவிட என்ற சொல்லானது பார்ப்பனர்களுக்கு எதிர்பதத்தில் அமைவதால் அந்த வார்த்தையே அவர்களுக்கு மிகுந்த எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. பார்ப்பனீயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாய் பெரியார் இருந்த காரணத்தினால்தான் இன்று அவர் ஒட்டு மொத்த தமிழர்களுக்குமே துரோகியாக உருவகப்படுத்தப்படுகிறார்.
இன்று தமிழ் தேசியம் பேசுகிற பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தீவிர சாதி ஆதரவாளர்கள் என்பதை விளக்க எடுத்துக்காட்டுகளை தேடி எடுக்க தேவையில்லை. ஒவ்வொருமுறை சேரிகள் எரிக்கப்படும் போதும் சாதி இந்துக்களின் வெறியாட்டத்தின் போதும் மேற்கொள்கிற கள்ள மௌனமே அவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்துகிறது.
சாதியத்தை தூக்கி பிடிப்பதால்தான் தமிழ் தேசியம் பார்ப்பனர்களின் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இப்படி பார்ப்பனீயத்தை தான் தமிழ் போர்வையில் மக்கள் மீது திணிக்கிற வேலையைச் செய்கிறார்கள். இந்த தமிழ் தேசியத்தை மிக எளிதில் மக்கள் மனதில் நிறுத்துகிற உணர்ச்சிகர அரசியலுக்கு உதவக்கூடியதாக மட்டுமே இவர்கள் தொடர்ந்து ஈழத்தை அரசியல்படுத்துகிறார்கள்.
ஈழம் என்பது இவர்களின் அரசியல் வியாபாரத்தின் மையப்பொருளாக இருப்பதன் காரணமே அது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அறிவை மழுங்கடிக்கிற வேலையை சிறப்பாக செய்வதால் தான். பார்ப்பனர்களை அவர்களும் தமிழர்கள் தானே என்று அணைத்துக்கொள்ள தெரிந்தவர்களுக்கு இங்கிருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களும் தமிழர்கள் தான் என்பது உறைக்காமல் போவதன் மர்மம் என்ன? அடிப்பவனையும் அடிவாங்குபவனையும் எப்படி ஒரே அளவுகோலில் வைத்து பார்க்க முடியும்? சாதி தமிழர்களுக்கு மீதி தமிழர்கள் பல்லக்கு தூக்க வேண்டும் என்பது தானே தமிழ் தேசியம்!
தமிழர்களாக ஒன்றுபடுங்கள் என்று கூப்பாடு போடுவதற்கு முன் முதலில் மனிதர்களாக ஓவ்வொருவரையும் உணரச்செய்ய வைக்க வேண்டும். சாதியை ஒழிக்க முடியாது என்று நழுவி வெறுமனே தமிழ் கோஷம் மட்டும் எழுப்புவதன் மூலம் பண்டைய தமிழ் மன்னர்களின் பார்ப்பன அடிவருட சேவை நிலைக்குதான் மக்களை அழைத்துச் செல்ல முடியும். ஆக உண்மையிலேயே தமிழ் தேசியம் அமைக்க விரும்புபவர்கள் அதன் பாடுபொருள்களாக தன் சக மனிதர்களையே மனிதர்களாக மதிக்காமல் இழிவுப்படுத்தி ஒடுக்கி அழிக்கின்ற வேலைகளுக்கு மூலமாக விளங்கும் சாதி, மதம் முதலியவற்றை அழித்தொழித்து மக்கள் அனைவரும் சமம் என்பதே தனது பிரதானக் கொள்கை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும். செய்வார்களா தமிழ்தேசியவாதிகள்?
மதத்தையும் சாதியையும் மறுக்காமல் ஒருபோதும் மக்களிடையே சமத்துவத்தை கொண்டுவர முடியாது. மக்களிடையே சமத்துவம் ஏற்படுத்தாத வரையில் என்ன கூப்பாடு போட்டாலும் அவர்களை ஒன்றுபடுத்த முடியாது.
அதைவிடுத்து பிரபாகரன் வாழ்க என்று கோஷம் போடுபவர்களுக்கு மட்டும்தான் தமிழன் பட்டம் கொடுப்போம் , மற்றவர்களெல்லாம் தமிழ் துரோகிகள் என்று பிதற்றுவதெல்லாம் மக்கள் மதிமயங்கி கிடக்கிற நாள் வரையிலும்தான் செல்லுபடியாகும் என்பதை பார்ப்பன தமிழ் தேசியவாதிகள் உணர்ந்துகொள்வது நல்லது.


-          LEO JOSEPH D
-          dleokommedu@gmail.com