வியாழன், 25 பிப்ரவரி, 2016

அருந்ததியின முதல் பெண் டாக்டர் இலக்கியா

அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது. வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வார்; தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவார். டீ கடையில் தனி டம்ளரெல்லாம் கிடையாது. சிரட்டையில்தான் டீ ஊற்றுவார்கள். அங்கே பிற ஜாதியினர் முன்  கூனிக் குறுகி நிற்பார்.  கடைக்காரர் நீட்டும்  சிரட்டையை  பணிந்து வாங்கி,  தலையைக் கவிழ்ந்தபடி டீயை உறிஞ்சி குடிப்பார்.

சின்னப்பெத்தனின் மகன் சுந்தரம் அடுத்த தலைமுறை ஆயிற்றே. செருப்பு தைத்ததில்லை. பட்டி, தொட்டியெல்லாம் சைக்கிளில் சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார். அப்போது சம்சாரி வீட்டு பெண்கள் பழைய பொருட்களை விற்கும்போது “"ஏம்பா நீ குடியானவனா?'’என்று கேட்பார்கள். சுந்தரமோ "என்னம்மா நீங்க? பழைய பொருளை விக்கிறதுக்கு ஜாதியெல்லாம் கேட்கிறீங்க? நான் அருந்ததியர்ம்மா'’என்பார். அவ்வளவுதான்... முகத்தைச் சுளித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுவார்கள் அந்தப் பெண்கள். சுந்தரத்தின் மனைவி கற்பகம் தனது மகள் இலக்கியாவை அழைத்துக் கொண்டு தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார். உள்ளே சென்று வழிபடுவதற்கு அனுமதி இல்லாததால், கோவிலுக்கு வெளியே நின்று கும்பிட்டுவிட்டு வந்தார். அப்போது “""ஏம்மா நாம கோயிலுக்குள்ள போகக்கூடாது?''’என்று கேட்டாள் இலக்கியா. ""இங்கே எல்லாமே இப்படித் தான். தொணதொணன்னு உசிர எடுக்காத''’என்று சத்தம் போட்டார் கற்பகம். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சின்னஞ்சிறு வயது  இலக்கியாவுக்கு  "இதுதான் ஜாதிக்கொடுமை'’ என்பதை உணர முடியவில்லை. அப்போது அவள் மூன்றாம் வகுப்பு படித்தாள். அவளது பாட்டி சுப்பம்மாள் வீட்டு வேலை பார்த்துவந்தார். அவர் வேலை பார்த்த சம்சாரி வீட்டுக்குச் சென்று தன் பாட்டிக்கு ஒத்தாசையாக துணிகளை துவைத்தாள் இலக்கியா. பாத்திரங்களை யும் கழுவினாள். வேலையை முடித்து விட்டு பாட்டியும் பேத்தியும் கிளம்பும் போது, ""இந்தாங்கடி... டீ குடிச்சிட்டுப் போங்கடி...''’என்றார் அந்த சம்சாரி வீட்டு அம்மாள்.  டீ குடிப்பதற்கு ஆர்வமாகத்தான் இருந்தாள் இலக்கியா. கொட்டாங்கச்சியில் தனக்கு டீ தந்த போது முகம் வாடிப்போனாள். 

அதே சம்சாரி வீட்டு அம்மாள் இலக்கியாவிடம் இப்போது வாஞ்சையாகப் பேசுகிறார். “""என்னம்மா நல்லா இருக்கியா? வீட்டுக்குள்ள வாம்மா... டீ சாப் பிட்டு போம்மா''’என்று பாசம் காட்டுகிறார். வீட்டுக் குள் அழைத்துச் சென்று ஷோபாவில் அமர வைத்து கப்பில் டீயும் தருகிறார். ""இப்ப மட்டும் என் ஜாதி எங்கே போச்சு?''’’ என்று வியக்கிறார் இலக்கியா.

அப்படியென்றால்... ஜாதி, பேதமெல்லாம் ஒழிந்துவிட்டதா? குடிசைவாசியான இலக்கியாவுக்கு இந்த மரியாதை எப்படி கிடைத்தது? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடைதான். ஆம்! எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டராகிவிட்டார் இலக்கியா.

திண்டுக்கல் மாவட்டம் -ஒட்டன்சத்திரத்தில் இலக்கியாவின் தந்தை சுந்தரத்தைச் சந்தித்தோம்.

""அப்ப அவளுக்கு மூணு வயசுகூட இருக்காது. காணாம போயிட்டா.. நாங்களும் தேடி அலைஞ்சு தவிச்சு போனோம். "என்னம்மா இவளாவே பால்வாடிக்கு படிக்க வந்துட்டா'ன்னு டீச்சர்தான் கொண்டுவந்து விட்டுட்டுப் போனாங்க. படிக்கிறதுல நம்ம புள்ள ரொம்ப ஆர்வமா இருக்குன்னு அப்பவே எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. பொறந்த ஜாதியால அவமானப்பட்டு வாழறது வெறுத்துப் போயி ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு நானும் ஆசைப்பட்டேன். வீட்ல வசதியில்ல, எட்டாம் வகுப்போட என் படிப்பு நின்னுப் போச்சு. மாட்டுத்தரகர் வேலை பார்த்ததுல நஷ்டப்பட்டு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குப் போயிட்டேன். அப்புறம்தான் ஆதி தமிழர் பேரவை அதியமான் அய்யா பண்ணுன உதவியால, இந்த பழைய இரும்பு, பிளாஸ் டிக் வியாபாரம் பார்த்து பொழைக்க ஆரம் பிச்சேன். சின்ன வயசுல இருந்தே எம் மகளை பக்கத்துல உட்கார வச்சு அடிக்கடி சொல்லுவேன். ""கேவலப்பட்டு வாழறது எங்களோட போகட்டும். நல்லா படிச்சாத் தாம்மா இந்த ஊரு உலகம் உன்னை மதிக்கும்னு சொல்லுவேன்.'' அவளும் நாஞ் சொல்லுறத  கவனிச்சு தலையை தலையை ஆட்டுவா. என் பேச்சைக் கேட்டு நல்லா படிச்சா. இப்ப டாக்டராயிட்டா. என் கனவு நிறைவேறிருச்சு''’என்றார் பெருமிதத்தோடு.

முதலில் பேசத் தயங்கிய இலக்கியா பிறகு கொட்டித் தீர்த்துவிட்டார். ""நான்  டாக்டர் ஆனதுல எங்கப்பா அடைஞ்சிருக் கும் சந்தோஷத்துக்கு அளவே இல்ல. அவருக்கு புள்ளையா பொறந்து அவரு மனசை நிறைய வைக்க என்னால முடிஞ் சிருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந் தாலும், நான் ரொம்ப பேருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். மொதல்ல எங்க டீச்சர்ஸ் சிலம்புசெல்விக்கும் சாந்திக்கும், அப்புறம் கலைஞர் அய்யாவுக்கு.

2009-ல அவரு முதலமைச்சரா இருக்கும்போதுதான் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடுங்கிறது சட்டமாச்சு. அப்ப கலைஞர் அய்யா குறிப்பிட்டுச் சொன் னது என் மனசுல நல்லா பதிஞ்சு போச்சு. அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாக கிடந்து அவதியுறும் மனித ஜீவன்கள்ன்னு அருந்ததிய மக்களைப் பத்தி உருக்கமா சொன்னாரு. எங்க மக்கள் புதிய உலகம்.. புரட்சியுகம் காண வேணும்னு சொல்லித்தான் உள் ஒதுக்கீடு சட்ட முன் வடிவை அவையில வச்சாரு. அப்பத்தான் எனக்கு ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துச்சு. 1085 மார்க் எடுத் திருந்தேன். மூணு சதவீத உள் ஒதுக்கீட்டுலதான்... தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரில எனக்கு சீட் கிடைச்சது. இந்த இட ஒதுக்கீடு  மட்டும் இல்லைன்னா நான் இன்னைக்கு டாக்டர் ஆயிருக்க முடியாது.

ஜாதி பார்க்காம உதவுற எத்தனையோ நல்லவங்களும் இருக்காங்க. நான் கவுன்சிலிங் போறதுக்காக தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணுங்கிறவர் அவரோட மனைவி நகையை அடகு வச்சு ரூ.10000-ஐ எங்கப்பாகிட்ட கொடுத்தாரு. ரூ.17000 தந்து காலேஜுல எனக்கு மொத ஃபீஸ் கட்டினது எம்.எல்.ஏ.சக்கரபாணி அய்யாதான். ஒட்டன்சத்திரத்துல கவர்மெண்ட் ஹாஸ்பிடல் திறக்கிறதுக்கு  வந்த மு.க.ஸ்டாலின் என்னைப் பத்தி கேள்விப்பட்டு படிப்புச் செலவுக்குன்னு அப்ப ரூ.10,000 கொடுத்தாரு. கஷ்டப்படற குடும்பத்துல இருந்து எம்.பி.பி.எஸ். படிக்க வந்திருக்கேன்னு எனக்கு அப்பப்ப டிரஸ்ஸு... செல்போனெல்லாம் வாங்கிக் கொடுத்தது எங்கூட படிச்ச ஃப்ரண்ட்ஸ்தான். ஃபைனல் இயர் படிக்கிறப்ப என்னால ஃபீஸ் கட்ட முடியல. சுபாஷிணி, பரமேஸ்வரி, பத்மா, சீதா, சாரதி, செம்பருத்தி, பிரகாஷ், இளவரசன், விஜின்னு ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் ஆளுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு போட்டு ஃபீஸ் கட்டினாங்க. இவங்கள்லாம் ஜாதியா பார்த்தாங்க? என் அனுபவத்துல சொல்லுறேன்... எந்த சமுதாயத்துல பிறந்தாலும் படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டா... இந்த ஊரும் உலகமும் ஜாதி பார்க்காம நம்மை மதிக்கத்தான் செய்யும்.

அதே நேரத்துல.. எங்க சமுதாய மக்கள் ஜாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்டு... வேதனையில துடிச்சிக்கிட்டிருக்கிறது உண்மைதான். அவங்க படிச்சு முன்னேறணும்னா கல்வி ரொம்ப  ரொம்ப அவசியம். எனக்கு முதல்மாச சம்பளம் வரும்ல... அதுல  டிரஸ்ட் ஒண்ணு ஆரம்பிச்சு, எங்க மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கிறதுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யணும்கிற திட்டம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டிருக்கு.

எல்லா மனுஷங்களும் ஒண்ணுதான்.. இதுல ஜாதியெல்லாம் எங்கேயிருந்து வந்து தொலைச்சுச்சோ? ஒரு டாக்டரா இருந்து எல்லா மக்களுக்கும் மருத்துவ சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. என்னோட வாழ்நாள் முழுதும் அதை நல்லபடியா செய்வேன்...''’என்றார் உறுதியான குரலில்.

பிறக்கும்பொழுதே ஒருவன் கீழ் ஜாதி, தொடக்கூடாதவன், எட்டி நிற்க வேண்டியவன், படிக்கக் கூடாதவன், கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாதவன், எல்லோருடனும் சமமாக உட்கார்ந்து சாப்பிட முடியாதவன், எல்லோருடனும் சமமாக திருமணம் செய்துகொள்ள முடியாதவன்... என்றெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சிந்தனை உடையவர்களாக, ஜாதிப் பற்றினை விட்டுவிட முடியாதவர்களாக பலரும் இருக்கிறார்கள். அதனால்தான், சமூக நீதிக்கான போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இலக்கியா போன்றவர்களோ  நம்பிக்கை நட்சத்திரங்களாக நம் கண் முன்னே மிளிர்கிறார்கள்-நக்கீரன் வார இதழ் 07.04.2015

ஜெய்பீம் - திரு. லெனின்

திசைகளில்
தீமூட்டுகிறது
ஜெய்பீம் முழக்கம்....

அடங்காவெறியோடு
ஆவேசம் கொண்டலைகின்றன
துருவேறிய சூலங்கள்...

ஆணியடிக்கப்பட்டப் பெட்டியில்
ஆவியடங்கி
அழுகிக் கொண்டிருக்கிறது
அந்த
அகண்டபாரதம்....

கடவாய் நக்கி
காட்டுக்கூச்சலிட்டு
ஜெய்...ஶ்ரீ...ம்
என்றதுகளின்
பிடரியை உலுக்குகிறது
அந்த
ஒற்றைச்சொல்...

பிழைத்திருக்க
கோவின் சாணமும்
கொழுத்தப் பசுவின் மூத்திரமும்
ஷேமகரமென
புக்ஷித்திருங்கள்....

காவியை
நீ லம்
சிகப்பு
நிர்மூலமாக்கும்...

ஜெய்பீம்
ஜெய்பீம்..

....லெனின்

தமிழகத்தை சீரழிக்கும் முப்பெரும் அபாயங்கள் - சேர்ந்த.சிவகுரு

இன்றையக் கண்ணோட்டம்-(258)
            *************************
#தமிழகத்தைச்_சீரழிக்கும்
             #முப்பெரும்_அபாயங்கள்

1.RSS &சங்கபரிவார்
2.ஜெயாவின் மாபியா கும்பல்
3.நாம் தமிழர் கட்சி.

ஏற்கெனவே இரண்டு அபாயத்தால் சின்னாபின்னாகிக் கொண்டிருந்த தமிழகம் இப்போது நாம் தமிழர் கட்சி என்கிற இனவாதக் கட்சியால் மக்கள்  மேலும் பிளவுபட்டு வர்க்க ஒற்றமை சீர் குலைகிறது.

எதிரிகளின் நோக்கமும் இதுதானே.

பெரியாருக்குப் பிறகு தைரியமாக நேர்மையாக பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்வதற்கு ஆளில்லாததாலும்

கம்யூனிஸ்ட்களின் பலவீனத்தாலும்

வலதுசாரிகள் 40ஆண்டுகளாக மெல்லமெல்ல நெருக்கி இப்போது வெளிப்படையாகவே இந்துமதவெறியைக் கக்குகிறார்கள்.

ஜாதியை,மதத்தை, பிற்போக்கு மூடக்கலாச்சாரத்தை திட்டமிட்டு பரப்பி மீண்டும் பார்ப்பனர்களின் பொற்காலத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்

இதை செயல்படுத்திக் கொண்டே அதன் மறைவில் ஏகாதிபத்தியத்தை நாட்டில் காலூன்ற வைப்பதும் தீவிரமாக நடக்கிறது.

அதே போல ஜாதியை இனவெறியை மூடநம்பிக்கையை தூண்டி விடுவதில் நாம்தமிழர் கட்சிக்கும் RSSக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

RSSகாரன் முஸ்லீமை விரட்டனும் என்கிறான் சீமான் கும்பலோ 'தமிழரல்லாத'மொழிச்சிறுபான்மையினரை விரட்டத் துடிக்கிறார்கள்.

அவர்கள் இல்லாத கற்பிதமான இந்துமதத்தின் அடிப்படையில் பாசிசத்தைக் கொண்டுவர முயல்கின்றனர்

இவர்களோ தமிழர் மதம்,ஆசீவகம், முப்பாட்டன் முருகனென காலாவதியான பிற்போக்கான கலாச்சாரத்கை மீட்க துவேசத்தைக் கிளப்புகிறார்கள்.

RSSகாரனோ முஸ்லீமை வந்தேறி என்கிறான் தமிழக RSS சீமான் கும்பலோ வடுக வந்தேறிகள் என்கிறார்கள்.

இந்துமதத்துக்குக் கட்டுபட்டு வாழ்வதாக இருந்தால் முஸ்லீம்கள் இந்தியாவிலிருக்கலாமென திமிர் பேச்சுப் பேசுகிறார்கள்.

இவர்களோ நீங்கள் வாழலாம்
நாங்கள்தான் ஆள்வோமென பாசிசத் தனமாகப் பேசுகிறார்கள்.

அதாவது இரண்டாந்தர குடிமக்களாக வாழப் பிச்சைச்சலுகை தருவார்களாம்
அதை சுயமரியாதை இல்லாமல் கேட்டு மற்றவர்கள் வாழ வேண்டுமாம்.

அவர்களும் கிராமப் பூசாரி மாநாடு நடத்தி பார்ப்பனீயமயமாக்கப் பார்க்கிறார்கள்.

இவர்களும் கிராமப் பூசாரி மாநாட்டை நடத்தி பிற்போக்கை வளர்க்கிறார்கள்.

எல்லா மதஇன வெறியர்களையும் போல் இவர்களும் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள்

இருவருமே பேசமுடியாவிட்டால் விவாதத்தை நிறுத்திவிட்டு கெட்ட வார்த்தையால் திட்டத் தொடங்குவார்கள்.

இருவருமே அதிகாரத்திலிருப்பவரை
அண்டிப் பிழைத்து வாழ்பவர்கள்.
காலை நக்கத்தயங்காதவர்கள்

இருவருமே சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள்
கலாச்சார குண்டர்கள்.

இருவருக்குமே பொருளாதார கொள்கை கிடையாது. நடைமுறையிலுள்ள முதலாளித்துவ சமூகத்தைக் காப்பதுதான் இவர்களது பொருளாதாரக் கொள்கை.

இரண்டு பாசிசத்துக்குமே இரட்டை நாக்குதான். இரண்டிலுமே உள்கட்சி ஜனநாயகம் கிடையாது.

RSSவெள்ளை ஏகாதிபத்தியத்தின் வளர்ப்புநாய் காலனியாதிக்கத்தை காக்கும் கள்ள வாரிசுகள்.

நாம்தமிழர் கட்சியோ ரா & தமிழக உளவுத்துறையால் வளர்க்கப் படும் வளர்ப்பு நாய்கள்.

உளவுத்துறையின் பிரிவினை திட்டம் 2வகையாக இருக்கும்
அவர்கள் சம்மதத்துடன் திட்டமிட்டு நேரடியாக நிதியுதவியைப் பெற்று சதி செய்வது, (சுப்ரமணிய சாமி, RSS,NGO)

நமக்கே தெரியாமல் நம்மை வேறு ஆள்களை வைத்து காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் ஒருகட்டத்தில் இவர்களுக்கு தெரியவந்தாலும் தெரியாதது மாதிரியே நடப்பார்கள்.

விடுதலைப்புலிகள், IS,தாலிபான்,
அண்ணாத்துரை, மாலிக், சிறீ சேனா,
பிரசண்டா, நாகாப்படை,
நாம் தமிழர் கட்சி இப்படி பல

ஆட்களை கொலை செய்வது, புற்றுநோய் கிருமி மூலம் ஆளைக் கொல்வது, அண்டை நாடுகளில் குண்டு வைப்பது, காஷ்மீர்,நாகா,மணீப்பூர் அசாமில் கருங்காலிகளை உருவாக்குவது, விபத்தின் மூலம் ஆளைக் கொல்வது என படுபயங்கரவாத அமைப்புதான் RAW என்கிற உளவு அமைப்பு.

CIA, RAW,மொசாத் இவர்கள் தலையீடில்லாத ஒரு செயலும் உலகத்திலும் கிடையாது இந்தியாவிலும் கிடையாது.

அது நாம் அறிந்தோ அறியாமலோ அவர்கள் நம்மை இயக்குவார்கள்

கார்ப்பரேட்டுகளின் காலனியாதிக்கம்,
அதை கூட்டிக்கொடுக்கும் பயங்கரவாத இந்திய அரசு, தமிழகத்தை அடிமைப்படுத்தும் இந்திய அரசும், சட்டங்களும், தமிழகத்தில் ஆதிக்க ஜாதி முதலாளிகளும்தான்
தமிழகத்தின் 90%மக்களுக்கு எதிரிகள்.

இதை எதிர்க்காமல்,இதை மாற்றாமல்
தமிழனை தமிழன் ஆண்டாலும் வேறு யார் ஆண்டாலும் விடியல் பிறக்கப் போவதில்லை.

நாம் தமிழர் கும்பலோ,சீமானோ இதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசுவது கிடையாது.

மாறாக மக்கள் விரோத அரசுக்கெதிராகத் திரளும் மக்களை ஜாதியால் மதத்தால் இனத்தால், மொழியால் பிரிக்க முயல்கின்றனர்.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலையை RSSகும்பலும், தமிழக RSSசீமான் கும்பலும் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.

இந்தியா இல்லாதபோது தமிழ்நாடு உருவாகாத போது 1000ஆண்டுகளாக தென்னிந்தியா முழுவதும் பரவலாக வாழ்ந்து வரும் மக்களை மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது அந்தந்த எல்லைக்குள் அவர்கள் மொழிச் சிறுபான்மையாகி விட்டனர்.

இப்படி தமிழர்களும் கேரளா, கர்நாடகா,ஆந்திராவில் மொழிச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.

அதை அந்தந்த மாநில அரசுகள் மெல்லமெல்ல தத்தமது தேசிய இனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக பாலக்காடு அட்டப்பாடி பகுதியில் 400கிராமங்களில் தமிழ்பேசும் ஆதிவாசிகளும் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர்
அவர்களை கேரள அரசு மலையாள மொழிக்கல்வி மூலம் அவர்களை மலையாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டனர்.

இங்கும் வீட்டில் கன்னடம் தெலுங்கு பேசி வந்த மக்கள் 3-வது தலைமுறையினர் தமிழ்வழிக்கல்வி மூலம் தெலுங்கு பேசுவதை மறந்து விட்டனர் இப்போது அவர்களை பிரிவினையைத் தூண்டுவதன் மூலம்
ஒற்றுமை சீர்குலைவது மட்டுமல்ல

இதன்பாதிப்பு நீண்டகாலத்துக்கிருக்கும்.
இலங்கையைப் போல உள்நாட்டுப் போரில் சிக்கி வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும்.

1500ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் தமிழர்களாகத்தான் இருந்தார்கள்

சமஸ்கிருதக் கலப்பால் உருத்திரிந்து புது மொழிகளாக உருவானது.

வெளிமாநிலத்தில் ,வெளிநாட்டில் "வந்தேறியாக"வாழும் தமிழர்கள் என்ன செய்வதெனக் கேட்டால் அவர்கள் அங்கு அடங்கி ஒதுங்கி வாழ வேண்டுமென்கிறார்கள் சீமான் கும்பல்

அதாவது இங்குள்ள 50லட்சம் பிறமொழி பேசுவோரை அடிமையாக்க
வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் வாழும் 2கோடி தமிழர்களை பலி கொடுக்கிறார்கள்.

இது 100 ஆண்டுகளானாலும் பிரச்சனைத் தீரப்போவதில்லை.

இவர்கள் "வடுகர்களை வெளியேறச் சொல்லவில்லையே"என்கிறார்கள்.
அடங்கி வாழு என்பது வெளியே போ என்பதைவிட வக்கிரம் பிடித்த நிலைபாடுதான்.

இவர்கள் "வெளியேறச் சொல்லாமல்"இருப்பதுகூட தற்காலிக தந்திரம்தான் .பெரியார் பிறந்த மண்ணாக இருப்பதால்தான் 
கட்சி வலிமையானால் மொழிச்சிறுபான்மையினரைத் தாக்கி விரட்ட முற்படுவார்கள். இது உறுதி.

பகையற்ற முரண்பாடுகளை பகைமுரண்பாடாக ஆக்கி பிரிவினையை வளர்ப்பதைத்தான் RSSம் தமிழக RSSசீமான் கும்பலும் செய்துவருகிறார்கள்.

தமிழர்களை அழிக்கும் பார்ப்பன சதியின் ஒரு பகுதியான ஜெயாவின் ஆட்சி விளங்குகிறது.

அரைடவுசர் போடாத RSSகாரி ஜெயாவும் அதை திறம்பட செய்து வருகிறார்.
கொள்ளையடிப்பது, தான்தோன்றித்தனமான அராஜக ஆட்சி மூலம் நாட்டை சீரழிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாவர்தான் இந்த பார்ப்பன ஜெயா.

அரசியல் மாற்றம்,சமத்துவம், சுதந்திரத்துக்காகப் போராடும் முற்போக்கு சக்திகள் இந்த 3கும்பலையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி தமிழக RSS.
சீமான் தமிழக பால்தாக்கரே
சீமான் தமிழக ராஜபக்சே.

RSS,பிஜேபி, சிவசேனா, அதிமுகவை கட்சியாகப் பார்க்கக்கூடாதெனச் சொல்லிவந்தோம் இப்போது நாம்தமிழர் கட்சியையும் சேர்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவைகள் ஒழிக்கப்பட வேண்டிய பாசிச சக்திகள்.

இனவகுப்பு போராட்டம்

தீண்டாமை பிரச்சினை என்பது இனவகுப்பு போராட்டமே ஆகும். இந்த இனப்போர் இந்துக்களுக்கும், தீண்டதகாதவர்களுக்கும் இடையே நடைபெறுவதாகும். இது ஒருவர் மற்றொருவருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி பற்றிய பிரச்சினை அல்ல, இது ஓர் இனம் மற்றொரு இனத்திற்கு எதிராக இழைத்துவரும் அநீதிபற்றியதாகும்.

   இந்த இனப்போர் ஓர் இனம் மற்றொரு இனத்தோடு எப்படி உறவுகொண்டிருக்கவேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. மற்றவர்களோடு நீங்களும் சமம் என்று சமத்துவத்தை கோரும்போதுதான் இப்போராட்டம் துவங்குகிறது.

பாபாசாகேப் Dr B.R அம்பேத்கர்

வியாழன், 8 அக்டோபர், 2015

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகளும் (?) ஈழமும்

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகள் என்ற சொற்பதத்தை படித்ததும் என்னால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. வைகோ வை எனக்கு பிடிக்கும், பிடிக்காது என்பதல்ல விஷயம். ஆனால் வைகோ பெரியாரிஸ்டுகள், கருணாநிதி பெரியாரிஸ்டுகள், பிரபாகரன் பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் பிராண்டட் பெரியாரிஸ்டுகளை பார்க்கும் போது நகைப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஒரு பகுத்தறிவாளனுக்கு மக்கள் பற்றை தவிர, இனம், மொழி, தேசியம் குறித்த பற்றெல்லாம் அறவே கூடாது என்கிறார் பெரியார். இதன் பொருள் பகுத்தறிவாளன் நாட்டைப் பற்றியோ, இனம் , மொழி பற்றியோ கொஞ்சமும் கவலைப்படக்கூடாது என்பதோ அவைகளைப் பற்றி சிந்திக்க கூடாதோ என்பதல்ல. எந்த ஒரு செயலும் மக்களை , மக்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி தான் அமைய வேண்டும் என்பதே.
ஆபாச புராண, இதிகாச கதைகளின் குப்பையாக காணப்படுகிற தமிழ் இலக்கியங்களை கண்டித்த தந்தை பெரியார் தான், மக்கள் எளிதாக பயன்படுத்தும்படி மாபெரும் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். காங்கிரசை மிக கடுமையாக எதிர்த்த பெரியார் தான், காமராஜரை ஆதரிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ஒன்றை எதிர்ப்பதாயினும், ஆதரிப்பதாயினும் மக்கள் நலனை மட்டுமே கண்முன் கொண்டு சிந்தித்தனால் மட்டுமே பெரியாரால் அப்படி செயல்பட முடிந்தது. பகுத்தறிவாளனின் இயல்பும் அழகும் அது தான்.
ஆனால் கடவுள் மறுப்பை மட்டுமே பகுத்தறிவாக, பெரியாரிசமாக முன்னெடுப்பவர்கள் தான் நாளடைவில் ஏதேனும் ஒரு தனிநபர் ஆதரவு நிலையெடுத்து பிராண்டட் பெரியாரிஸ்டுகளாய் உருவெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களை பெரியாரிஸ்டுகளாய் காட்டிக்கொண்டே, பெரியாரியக் கொள்கைகள் நீர்த்துபோகச் செய்யும் வேலையையும் இவர்கள் செவ்வனே செய்கிறார்கள்.
பெரியாரை படித்தவருக்கு அம்பேத்கர் அந்நியமாய் பட நியாயமில்லை. அம்பேத்கரைப் படித்தவருக்கு பெரியார் அந்நியமாய் பட நியாயமில்லை. இருவரது நோக்கமும் கொள்கையும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் தங்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிற சிலர் திட்டமிட்டே அண்ணல் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள், ஒதுக்கி வைக்கிறார்கள். தங்களை அம்பேத்கரிஸ்டுகள் என்று காட்டிக்கொள்கிற சிலர் , தந்தை பெரியாரை தலித் மக்களின் விரோதி என சித்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
பெரியாரையும் அம்பேத்கரையும் ஒருவர் மாற்றி ஒருவர் புறக்கணிக்கிற இவர்கள், பிரபாகரன் என்று சொன்னால் மட்டும் கூட்டாக சேர்ந்து காவடி தூக்க முண்டியடிக்கிறார்கள். கடவுளேயாயினும் கேள்வி கேட்ட பூமியில் கடவுளுக்கும் மேலானவராக பிரபாகரனை உயர்த்தி , எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவராக அவரை காக்க துடிக்கிறார்கள்.
பிரபாகரன் பெயரோடு வாழ்க என்பதை தவிர வேறு எதை சேர்த்து சொன்னாலும் உடனடியாக தமிழின துரோகி பட்டம் கட்டி தங்கள் தமிழினப் பற்றை பறை சாற்றுகிறார்கள். ஆனால் மூச்சுக்கு முன்னூறு முறை இவர்கள் உச்சரிக்கிற தமிழினப் பற்றை அலசிப்பார்த்தால் ஒரே சாதி வெக்கையாக இருக்கிறது.
கடல்கடந்து இருக்கிற இலங்கை நாட்டில் சிங்கள ஆதிக்கவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தி கொன்று குவிக்கிறார்கள், தமிழீழம் வேண்டும், ஒழிக சிங்கள பவுத்த ஆதிக்கம், வளர்க தமிழ் தேசியம் என்று கூவி தங்கள் இனப்பற்றை காட்ட தெரிந்தவர்களுக்கு இங்கே, இதே நாட்டில், இதே ஊரில், இதே தெருவில் நடக்கிற எதுவும் காதுக்கு எட்டுவதுமில்லை, கண்ணுக்கு புலனாவதுமில்லை.
ஆதிக்க சாதி வெறியர்களின் திட்டமிட்ட வன்முறைகளால் ஆண்டாண்டு காலமாக அடிப்பட்டு மிதிப்பட்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரோ கூக்குரலோ அவர்களுக்கு அந்நியமாய் படுகிறது. எதுவெல்லாம் ஈழத்தில் நடக்கும் அநீதி என பொங்குகிறார்களோ அவைகளை மிஞ்சிய அநீதிகள் இங்கும் தினந்தோறும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எவையெல்லாம் ஈழத்திற்கு தேவையோ, அதே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டிதான் இங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லை தாண்டி நீளும் உங்கள் இரக்கம் மிகுந்த கைகள், எதிரே வீழ்த்தப்படுகிற தாழ்த்தப்பட்டவனைக் கண்டால் மட்டும் முடக்கிக்கொள்கிறது.
தங்களை அம்பேத்கரிஸ்டுகள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர்கள் என்பவர்களும் பிரபாகரனைக் கொண்டாடுவதில் காட்டும் முனைப்பை தந்தை பெரியாரை கொண்டாடுவதில் காட்டுவதில்லை.
ஆதிக்க சாதியினர் பிரபாகரனை, தமிழ் தேசியத்தை கொண்டாடுவதில் லாபமிருக்கிறது. தமிழராக இணையுங்கள் என்று கூவிக்கொண்டே தங்களின் சாதி அக்கிரமங்களை மூடி மறைக்க அல்லது பங்காளி சண்டை என்று அதை நியாயப்படுத்திக்கொள்ள பிரபாகர முகமூடி அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
ஆனால் தன் மண்ணில் சாதிக்க முடியாத சமத்துவத்தை, சுதந்திரத்தை , சகோதரத்துவத்தை ஈழத்தில் மட்டும் சாதித்துவிட முடியுமென முஷ்டி உயர்த்துவது அப்பட்டமான , மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம்.
திமுகவை எதிர்க்கிற தமிழ்தேசியவாதிகள் கூட வைகோவிடம் தங்கள் திராவிட எதிர்ப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு வாலை குழைக்க அவரின் ஆதிக்க சாதிக்கு ஆதரவான தமிழ்தேசிய பற்றும் காரணம்.
பிரபாகரன், வைகோ, ஜெயா, கருணாநிதி என எந்த தனிப்பட்ட நபர் ஆதரவு நிலை கொண்டும் பகுத்தறிவாளனாய் இருக்க முடியாது. தனி நபர் துதி மதியை மழுங்கடிக்கிற யுக்தி. பிரபாகரனை கொண்டாடுங்கள், ஆனால் அந்த கொண்டாட்டங்களினால் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு துளி நன்மையுமில்லை. ஆனால் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒரு சேர முன்னெடுப்பது பார்ப்பனியத்திற்கெதிரான மாபெரும் ஆயுதம். நீங்கள் யார் என்பதை பகுத்தறிவின் துணைகொண்டு நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
- லியோ

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?
ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் கட்டாயம் தேவை என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தங்கள் மாநிலத்திலுள்ள சாதக அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு விளக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால் இந்த மாநாடு நடைபெற்ற காலமும் விதமும் அதன் நோக்கமும் தான் முகம் சுளிக்க வைக்கிறது.
ஆளும் அரசிற்கு உண்மையிலேயே மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை இருந்திருக்குமேயானால் ஆட்சிக்கு வந்த முதல் இரு ஆண்டுகளில் இப்படியான முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீடுகளைப் பெற்று அடுத்த மூன்று ஆண்டுகளில் அழகான தொடக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் நடந்தது என்ன?
முதல் சில ஆண்டுகளும் 110விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவதை மட்டுமே ஜெ தனது ஆட்சியின் முழுநேர வேலையாகக் கொண்டிருந்தார். அப்படி வெளியிடப்பட்ட அறிவிப்புகள் யாவும் கோப்புகளிலேயே முடங்கி கிடக்கின்றன. அடுத்த ஒரு வருட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். கொட்டாவி விடக் கூட ஜெ கை காட்டினால்தான் ஆச்சு எனுமளவிற்கு பவ்ய பன்னீராக உலாவந்தார். பட்ஜெட் கூட்ட தொடர் கூட பத்திரிக்கைகள் காறி உமிழ்ந்த பிறகு தான் வேண்டா வெறுப்போடு கூட்டப்பட்டது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாத காரணத்தால் எல்லா துறைகளும் முற்றாகவே முடங்கி போயின.
அப்போதே நடக்க வேண்டி திட்டமிடப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஜெ மீண்டும் கோட்டை வந்த பின் நடத்த வசதியாக மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. குமாரசாமி கணக்கால் மீண்டும் கோட்டைக்கு வந்த ஜெ வின் உடல்நிலைப் பற்றி பல்வேறு யூக செய்திகள் வெளிவந்தன. அரசு சார்பிலேயே அவருக்கு உடல்நலம் சரியில்லை என அறிக்கை வெளியிடப்பட்டது.
மே மாதம் நடக்கவிருந்த மாநாடும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவரின் உடல்நிலையை காரணம் காட்டாமல் மே மாத வெயில் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தான் கலைஞர் தனக்கேயுரிய பாணியில், மே மாதம் வெயிலடித்தால் செப்டம்பரில் மழையடிக்குமே என அப்போது கிண்டல் செய்திருந்தார்.
ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்போது கூட்டப்பட்டிருக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டால் நமது மாநிலத்திற்கு என்ன பயன்? மாநாடு நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அது நடைமுறைக்கு வரும்போதுதான் உண்மையான முதலீடு எவ்வளவு என்பது தெரியவரும். கிடப்பில் கிடக்கிற பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களே இதற்கு சாட்சி.
இனிமேல் ஆட்சி முடிவதற்கு முன் உடனடியாக எந்த முதலீடும் வர வாய்ப்பில்லை. முதலீட்டாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சசிகலா தன்னிடமுள்ள கருப்பு பணத்தை தனது பினாமிகள் மூலம் கொட்டி தொழில் தொடங்கினால் தான் ஆச்சு. ஆனால் இந்த மாநாட்டை ஆட்சியின் தொடக்கத்தில் நடத்தியிருந்தால் இதன் பாதையே வேறு.
ஆனால் இப்போது தேர்தல் காலத்தில் இத்தனை லட்சம் கோடி முதலீடு என வெற்று பம்மாத்து காட்டி மக்கள் தலையில் மஞ்சள் அரைக்க மட்டும் தான் இந்த மாநாடு உதவும் . ஏதோ அதிமுக கட்சி மாநாடு போல கொடி தோரணங்களோடு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருப்பவர்களை நினைத்தால் ஒரு படத்தில் வடிவேலு தனது டவுசர் பாக்கெட்டுகளில் கைவிட்டு உள்துணியை இழுத்துக்காட்டி , ஒண்ணுமில்லையே என ஒய்யாரமாக நடந்து போகிற காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

அரசியல் பேசுவோம்: விசிக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

அரசியல் பேசுவோம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை தான். ஆனால் அவரை விமர்சிப்பவர்களின் உள்நோக்கம் வெள்ளிடைமலையாக தெரிகிறது.
ஆதிக்க சாதியினரின் விமர்சனங்களில் , இவனால் தானே இந்த பற பயலுவலாம் நமக்கு சமமா அரசியல் செய்ய, பேச செய்கிறார்கள் என்ற ஜாதி வன்மமும் சில தாழ்த்தப்பட்ட பிரிவினர்களின் விமர்சனங்களில் தங்கள் சொந்த சாதியின் மீதான சுய ஜாதி போதையும் தான் பீய்ச்சியடிக்கிறது.
மற்றபடி தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் முன், அவருக்கு மாற்றாக , அவரைவிட எல்லா வகையிலும் சிறந்த ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடிகிறதாவெனில், இல்லை.
இன்று என்னைப் போன்ற சாதாரண பாமரன்களும் அரசியல் பேச முடிகிறதெனில் அதற்கு அண்ணல் அம்பேத்கரின் ஒளியை சேரி இருட்டில் பாய்ச்சிய தலைவர் திருமாவளவன் தான் காரணம்.
விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிறை குறைகளோடு தான் அதனை ஆதரிக்கிறோம். எங்களுக்கு தெரியும் இது போதுமானதல்ல என்று. ஆனால் நாங்கள் கரையேற இந்த துரும்பை விடவும் இப்போது வேறு மாற்று இல்லை எனும் போது அதை இறுகப் படிப்பதே எங்கள் அறிவார்ந்த பாதையாக இருக்க முடியும்.
தலைவர் திருமாவளவன் ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என சிலர் குற்றப்பட்டியல் வாசிக்கிறார்கள். சமூக நீதி, சமத்துவம் பேசி பல ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிடக் கட்சிகளால் பட்டியலின மக்களுக்கு மிஞ்சியது துரோகம் மட்டுமே.
திராவிடத்திற்கு மாற்று என கூவும் தமிழ்தேசியவாதிகளின் சாதி நோய் முற்றி நாற்றமெடுத்து ஓட வைக்கிறது. அப்படி இருக்க எங்களுக்கான எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடி வெல்ல வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்தே இருக்கிறோம்.
எந்த குறிப்பிட்ட சாதியையும் தன் அடையாளப்படுத்தாமல் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஏன் இதர பிற்படுத்தப்பட்ட , முன்னேறிய சாதிகளின் பெயரால் கட்சி நட த்துகிற தலைவர்களின் வஞ்சிப்பிற்கு உள்ளாகிற மக்களுக்காகவும் சேர்த்தே பாடுபடுகின்ற ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான்.
எங்கள் கைகளை ஒன்றிணைத்து அதை பலப்படுத்துவது தான் எங்கள் முன் உள்ள பணியே அல்லாமல் நீலி கண்ணீரோடு தலைவர் திருமாவளவனை எங்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என எண்ணி பொய்யுரைகளை புழுதிவாறி தூற்றினால் நாங்கள் மயங்கி போவோம் என எண்ணியிருப்பின், உங்களுக்கு பரிசளிக்க எங்களிடம் ஏமாற்றம் மட்டுமே இருக்கிறது.

விசிக சாதி கட்சியா?

விசிக சாதி கட்சி?
வீர பறையர்களே! வீர பள்ளர்களே! வீர சக்கிலியர்களே! ஒன்றிணையுங்கள் என்று விசிக எப்போதாவது கூவி அழைத்ததா?
நாம் ஆண்ட சாதி, பேண்ட சாதி என சாதி மலத்தை கரைத்து வாயிலூற்றி போதை ஏற்றியதா?
சொந்த சாதிக்குள்ளேயே மணம் முடியுங்கள் என்று சாதி தூய்மை பேசியதா?
எந்த வகையில் விசிக சாதி கட்சி? தலித் மக்களுக்காக பாடுபடுவதாலா? சாதி ஒழிப்பு தான் உங்கள் நோக்கமெனில் நசுக்கப்படுபவனை நோக்கியல்லவா உங்கள் கரம் நீள வேண்டும்?
அதெப்படி நீ சாதியை ஒழிக்க சொல்லலாம்? சாதி ஒழிப்பை பேசினாலும் சாதி கட்சி தான், நீ வாயை மூடிகிட்டு சும்மா இரு, நாங்க ஏறி மிதிச்சுட்டே இருப்போம் ன்றது தான் உங்க சமூக நீதியா?
நடுநிலை என்பது கைகட்டி வேடிக்கை பார்ப்பது அல்ல. நியாயத்தின் பக்கம் நிற்பது, அநீதியை துணிவுடன் எதிர்ப்பது. ஆனால் இவையெதையும் செய்ய தயாராக இல்லை நீங்கள்.
உங்கள் நோக்கமெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக யாரும் குரல் கொடுக்க கூடாது, அவர்கள் இப்படியே சாதி அடிமைகளாகவே தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
அதனால் உங்களால் சமூக நீதியை வாய்கிழிய மேடைகளில் முழங்கிக்கொண்டே, சாதி ஒழிப்பை, சமத்துவத்தை, மனித சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு இயக்கத்தை சாதி முத்திரை குத்தி ஒடுக்கவும் முடிகிறது.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...